இந்தியாவின் இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இரு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரவுள்ளார்.
நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவே அவரின் இந்த வருகை அமையவுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதிக்கு இராணுவ மரியாதை அளிக்கப்படும்.
இந்தப் பயணத்தில் இந்திய இராணுவ தளபதி, இலங்கை இராணுவ தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், மூத்த இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடுவார். அத்துடன், இலங்கையில் போரில் கொல்லப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுச்சின்னத்திலும் அஞ்சலி செலுத்துவார்.
இதேவேளை, இந்திய இராணுவ தளபதி இன்று திங்கட்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு செல்லவுள்ளார். அங்கு இரு நாட்கள் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்து இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

