Site icon Sangathy News

இலங்கை வந்தடைந்தார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிலுநர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version