Site icon Sangathy News

மழை வெள்ளத்தால் மட்டு. கிரானில் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது.

பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கத்தால் நேற்று இரவு மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் பலத்த காற்று வீசி வருகிறதுடன் கடல் கொந்தளித்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, தும்பங்கேணி, றூகம், கட்டுமுறிவு, வாகனேரி, வெலிகந்தை, வடமுனை, புனானை மற்றும் மாவடி ஓடை போன்ற குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் இரு வான் கதவுகள் 3 அடிக்கும் ஒரு வான்கதவு 4 இடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய குளங்களின் வான் கதவுகள் அந்தந்த குளத்தின் நீர் மட்டத்துக்கு அமைவாக வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனையடுத்து தாழ் நிலப்பகுதிகள் மற்றும் நெல் வயல்களில் வெள்ளநீரில் மூழ்கிவருகின்றதுடன் கிரானுக்கும் புலிபாந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்தின் ஊடாக வெள்ள நீர் 4 அடி உயரத்திற்கு பாய்ந்து வருவதால் அந்த பகுதிகளுக்கான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வவுணதீவு மட்டக்களப்பை இணைக்கும் வலையிறவு பாலத்தில் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து அதனை அண்டிய பகுதி மக்கள் கவனமாக செயற்படுமாறு இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Exit mobile version