வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று அந்த வீட்டை விபசார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டை கட்டி, அதை கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த வீட்டுக்கு பெண்கள், ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்து செல்வதை அவதானித்த அயலவர்கள், வீட்டில் தவறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை ஊகித்து, வெளிநாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் குறித்த வீட்டை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை வீட்டை முற்றுகையிட்டனர்.
வீட்டினுள் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது தென்னிலங்கையில் இருந்து விபசார நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்டிருந்த மூன்று பெண்கள் மற்றும் வீட்டை வாடகைக்கு பெற்றிருந்த நபர் உட்பட நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

