கொழும்பு கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரை இன்று ஞாயிற்றுக்கிழமை ஈ.பி.டி,பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்று விகாராதிபதி தெரிவித்தார்.
மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

