Site icon Sangathy News

இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளிவிவகார அமைச்சர் பாராட்டு

இலங்கை தற்போது சரியான பாதையில் பயணிக்கின்றது என்றும் நாட்டின் விரைவான மீட்சிக்கு சீனா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உறுதியளித்தார்.

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

நெருக்கமான உறவு: இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு தசாப்த கால இராஜதந்திர உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவை (Strategic Cooperative Partnership) மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மீள உறுதிப்படுத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்ததுடன், சேதமடைந்த வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான இரண்டாம் கட்ட உதவிகளையும் கோரினார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் மக்கள் நலக் கொள்கைகளை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வரவேற்றார். இலங்கை தற்போது சரியான பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் விரைவான மீட்சிக்கு சீனா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

ஹம்பாந்தோட்டையில் அமையவுள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் தொடர்பான உடன்படிக்கை, 2026 ஆம் ஆண்டின் முதலாண்டு காலாண்டில் இறுதி செய்யப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை – சீனா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை 2027ஆம் ஆண்டில் கூட்டாகக் கொண்டாடுவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தச் சந்திப்பின் போது ‘ஒரே சீனா’ (One China Policy) கொள்கைக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை அமைச்சர் விஜித ஹேரத் மீள வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version