யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை விடிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

