Sangathy News

தலைவரின் ஊரில் அணிவகுத்த பட்டங்கள்

தைப்பொங்கல் தினமான நேற்று வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெற்றது.

பல வண்ணங்களில் பலவிதமான பட்டங்கள் நூற்றுக்கணக்கில் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டத் திருவிழாவை காண்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்று கூடியிருந்தனர்.

வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் என்பவை இஇணைந்து இந்தப் பட்டத் திருவிழாவை முன்னெடுத்தன.

அக்சிலேற்றர் வடிவில் அமைந்த பட்டம் முதலாம் இடத்தைப் பிடித்தது. இதனை யோ. பிரகாஷ் என்பவர் வடிவமைத்திருந்தார்.

விண்ணில் சிதறிய இரத்தினங்கள் வடிவத்தில் வடிமைக்கப்பட்ட பட்டம் இரண்டாம் இடத்தையும் சாகசம் காட்டும் விமானத்தின் வடிவத்திலான பட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. இந்தப் பட்டங்களின் உரிமையாளர்களான லோ. கோபிசாந், யோ. பிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வென்றனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர்  எம். கே. சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version