Site icon Sangathy News

போர் குற்றவாளிகளை தண்டிக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர் குற்றங்கள் – மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்தக் கடப்பாடு நிறைவேற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல் திட்டம் கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை தொடர்பிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையானது, இலங்கையில் நிகழ்ந்த சர்வதேச சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்னேற்றகரமானதொரு நகர்வாகும்.

கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் யுத்தகால பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவற்றைப் போர் குற்றங்களாகவோ அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவோ கருதமுடியும்.

இந்த அறிக்கையின் ஊடாகக் கண்டறியப்பட்டிருப்பதன் பிரகாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்கள், அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன.

இதேவேளை இலக்கிடப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள், வழக்குத்தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – என்றும் கூறப்பட்டுள்ளது

Exit mobile version