Site icon Sangathy News

ஜனாதிபதியின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்! – தமிழரசின் எம்.பி. சத்தியலிங்கம்

ஜனாதிபதி மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளபோதிலும் அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும் அவர்களை காணாமல் ஆக்கியும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.

ஆனால் இந்த தலைமுறை ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தை பார்க்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூற வரவில்லை. இளம் துடிப்பான நல்ல விடயங்களை பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக இவர் இருக்கிறார்.

எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

ஜனாதிபதியின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே நாம் அறிந்தோம். அதிகாரபூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கூட, ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ வடக்குக்கு வரும்போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடும் பண்பு இருந்தது. ஆனால் தற்போதைய அரசு தனது கட்சி உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனைகளை மேற்கொள்கின்றது.

ஜனாதிபதி மக்களைச் சந்திப்பது வரவேற்கத்தக்கது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அவர் அறிந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான திசைக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், தமிழ் மக்களும் ஏனைய இனங்களைப் போல சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழலை எவராவது ஏற்படுத்தினால் அத்தகைய முயற்சிக்கு நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும்-என்றார்.

Exit mobile version