Site icon Sangathy News

ஹெரோயின், ஐஸ் போதையுடன் வேலணையில் இருவர் கைது

விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2,350 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் ஆளுகைக்குள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனாலும், சிலர் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் வினோத்குமார் தலைமையிலான அணியினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விற்பனைக்கு தயாராக குறித்த போதைப் பொருட்களை வைத்திருந்தபோதே வேலணை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமக்கு நாச்சிக்குடாவில் இருந்தே போதைப்பொருள் கிடைப்பதாக குறித்த இருவரும் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்திருந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இருவரும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Exit mobile version