Site icon Sangathy News

கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிடவேண்டிய அவசியமில்லை – சீ.வீ.கே.சிவஞானம்

“தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில்-கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிடவேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அநுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது.”

-இவ்வாறு தெரிவித்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்.

நல்லூரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

வெறுமனே அரச நிதியில் என்.பி.பி. அல்லது ஜே.வி.பி. கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர்.

எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் “ஷோ” காட்டுவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. என்.பி.பியினர் வடக்கிற்கு வந்து படம் காட்டுவதை நிறுத்தவேண்டும்.

இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்படவேண்டும். இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்-என்றார்.

Exit mobile version