Site icon Sangathy News

யாழ். போதனா மருத்துவமனை தேசிய மருத்துவமனையாகிறது

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் – எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார மேற்பார்வை குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் கூட்டம் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் நடந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், யாழ். மருத்துவ பீடாதிபதி குழுவினர் கலந்து கொண்டு, மருத்துவமனையின் தற்போதைய நிலைமை மற்றும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கினர்.

ஆளணி பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைஎதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தீர்வாக, எதிர்வரும் காலங்களில் தேவையான சுகாதார ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வைக் குழு உறுதி அளித்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை நான்காவது தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும் இதன்போது தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்குத் தேவையான அடிப்படை ஆளணி அதிகரிப்பு மற்றும் சில முக்கிய சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, தேசிய மருத்துவமனையாகஅறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version