“மகிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தேன்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க அவரது அரசாங்கத்தில் இருந்தே போராடினேன்.
13 இல் கைவைத்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவேன் எனவும் அறிவித்திருந்தேன்.” எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தச்சட்டம் என்பதைவிட, தமிழ் மக்களுக்கு தமது பகுதிகளை ஆள்வதற்குரிய அதிகாரம் வேண்டும். இந்த நோக்கில்தானே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.
நல்லாட்சியின்போது தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எமக்கு போதிய பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.
சமஷ்டி ஒரு பக்கம் இருக்கட்டும். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அதனை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது?” – என ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்

