Site icon Sangathy News

13 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்திய மூவர் கைது!

13 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, பத்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட 10 கிலோகிராம் 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோகிராம் 912 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பயணிகளும் போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 8 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடையவர் என்றும், அவர் இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version