எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக இந்தப் போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இப்போராட்டத்தை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

