கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகி 39 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்த குளவிக் கூடு கலைந்து மைதானத்தில் நின்றிருந்தவர்களை கொட்டியது.
பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வலியுறுத்தியும் பாடசாலை நிர்வாகம் இரு மாதங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்த போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

