வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காரைநகர் – சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த கிருஷ்ணராஜா சாரங்கன் (வயது 26) என்பவர் உயிரிழந்தார். காரைநகர் – விக்காவில் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

