Site icon Sangathy News

அமரகீர்த்தி அத்துகோரள படுகாலை: 12 பேருக்கு மரணதண்டனை

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று புதன்கிழமை இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பொலன்னறுவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, நிட்டம்புவ நகரில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தன ஆகியோர் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஏற்பாட்டுக் குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவு முன்னெடுத்தது.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 14 குற்றச்சாட்டுகளின் கீழ் 41 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது 13 மற்றும் 31 ஆம் பிரதிவாதிகள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 39 மற்றும் 40 ஆம் பிரதிவாதிகள் நீதிமன்றத்தைத் தவிர்த்துத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்கள் இல்லாமலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 14 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் எழுத்துமூல சமர்ப்பிப்புகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத் தீர்ப்பு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version