ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்
இவ்வாறு யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டேயிடம் த.தே.ம.முன்னணி வலியுறுத்தியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் நேற்றுக் காலை 11:30 மணிக்கு கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின்போது – அநுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அனுர அரசாங்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கியராஜய’ அரசியலமைப்பு வரைபையை அரசியலமைப்பாக கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த வரைபானது இதுவரை இருந்து வருகின்ற அரசியலமைப்பில் உள்ளதைப் போன்ற ஒற்றையாஆட்சி முறையாகும்.
அந்த வரைவு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாகும்.
இவ்வாறான தமிழ்மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும் அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டது.
மேலும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டும் வகையில் ‘சமஸ்டி’ அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் அதன் மூலமே தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் அனுர அரசின் ஆட்சியிலும் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த இந்திய அரசு இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரால் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக ‘கிபுல் ஓயா’ திட்டம் தமிழர் தாயகத்தின் இன பரம்பலை மாற்றியமைக்கும் குறிக்கோளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1985 ஆம் ஆண்டில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மீளக்கூடியமர அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒற்றையாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளி மாகாணங்களை சேர்ந்த சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்றினார்கள். அவ்வாறு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயத்திற்கான மேலதிகமான நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கே இத்திட்டம் 2013-ல் ராஜபக்சாக்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இதே திட்டத்ததிற்கே 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2000 கோடி நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன், கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத திட்டத்தையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்டினர்.
மேலும் சிறிலங்கா பொருளாதாரத்தில் விழுந்திருக்கும் தற்போதய சூழலில், நாடு பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவிலேயே முழுவதுமாக தங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஆதரவை நாடி நிற்கின்றது. இவ்வாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களது உதவிகளை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடும் அதேவேளை, மறுபுறமாக தனது திறைசேரி மூலம் நிதி ஒதுக்கீடுகளை செய்து சிங்கள பௌத்தமயமாக்கலையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளையும் தமிழர் தேசத்தின் இருப்புக்கு எதிராக மேற்கொண்டுவருகின்றது.
கடந்து வந்த அரசாங்கங்கள் தொடந்த அதே இனவாத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் செய்து வருகிறது. ‘கிபுல் ஓயா’ திட்டம் தமிழர்களின் இருப்புக்கு எதிரானது என்ற வகையில் இந்திய அரசு தலையீடு செய்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற விடயமும் முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது.
ஆத்துடன் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு நான்கு நிழல் அமைச்சர்களை அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் என்பிபி கட்சியின் ஆதிக்கததை மறைமுகமாக ஏற்படுத்துகின்றது. அத்துடன் ‘பிரஜா சக்தி’ என்கின்ற திட்டம் ஊடாக கடசி உறுப்பினர்களை நியமித்து அதிகாரத்தை வழங்கி அரச நிர்வாக கட்டமைப்பை கேலிக்குள்ளாக்கும் வகையிலும் உள்ளுராடசி மன்றங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை புறக்கணித்து அரச நிர்வாகத்தை அரசியல் மயமாக்கி சர்வாதகாரம் நோக்கியும் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கியும் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
வுலிகாமம் வடக்கில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென மக்கள் கோரிவரும் நிலையில் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் வலி வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இரண்டு கட்டங்களாக புத்தசாசன அமைச்சில் இடம்பெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்கள் அழைக்கப்படாமல் புத்தசாசன அமைச்சினால் அழைக்கப்படாத நிலையில், சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டதன் மூலம் இனக்குரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் குற்றத்தைப் புரிந்த குறித்த சட்டவிரோத விகாரையில் தங்கியுள்ள பிக்குவை அழைத்து பௌத்த சாசன அமைச்சர் உரையாடியது இந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடேயாகும். இவ்விடயத்தில் இந்திய அரசு தலையிட்டு காணிகளை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மேலும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக தற்போதும் உள்ள வசாவிளானில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக இராணுவ வைத்தியசாலை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகும் அனுர அரசாங்கத்தின் நடிவடிக்கைகளை தடுத்து, காணி உரிமையாளர்களுக்கு சொந்தமான காணிகள் உரிமையாளர்களுக்கு கிடைக்க இந்திய அரசு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சந்திப்பின்போது முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன். பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தாமதப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில், அந்த அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
