வெள்ளைமாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கொல்லப்பட்டவர் 21 வயது இளைஞர் என்றும், இரகசிய சேவை அமைப்புக்கு அவர் நன்கு தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகைக்கு மிக அண்மையாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலேயே இருந்தார் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவர் மாளிகையில் எங்கிருந்தார் என்பது எவருக்கும் தெரியவில்லை.
10 முதல் 20 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதையடுத்து இரகசிய சேவை அமைப்பினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சந்தேகநபர் காயமடைந்தார் என்றும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனவும் கூறப்பட்டது. நசீர் பெஸ்ட் என்பவரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். இவர், 2025 ஜூலையில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றபோதும் கைது செய்யப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் அவருக்கு அருகேயிருந்த நபர் ஒருவர் காயமடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டையடுத்து, வெள்ளைமாளிகையை சுற்றியுள்ள வீதி மூடப்பட்டது.
இதேசமயம், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருக்கு மனநல பிரச்சனைகள் இருந்தன என்பதற்கான ஆவணப்படுத்தலும் உள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
