கனடாவின் ரொறன்ரோவில் உள்ள முன்னணி விமான நிறுவனம் ஒன்றின் முன்னாள் கப்டன், தேவையான தகுதி விவரங்கள் மற்றும் உரிய அனுமதிப்பத்திரமின்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியுள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘புராஜெக்ட் இகாரஸ்’ என்ற விசேட விசாரணை குறித்த முக்கிய விவரங்களை வெளியிடுவதற்காக இன்று காலை 11 மணிக்கு அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஒரு ‘சிக்கலான மோசடி’ விசாரணை எனப் பொலிஸார் விவரித்துள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பீல் பிராந்திய பொலிஸின் பிரதித் தலைவர் நிக் மிலினோவிச் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு கூடுதல் விபரங்களை வெளியிடவுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கனடாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தச் சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து விமானிகளும் தங்களின் பறக்கும் திறனை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை கட்டாய மறுபயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மேலும், ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் கனடிய போக்குவரத்து திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட பரிசோதகர் மூலம் நேரடிப் பறத்தல் சோதனையும் செய்யப்படுகிறது – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
