பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர். 487 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பிந்தைய அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. இதனால், மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மிண்டாநயோ தீவில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீதிகள் பிளவடைந்தும் நிலச்சரிவுகளால் மூடப்பட்டும் உள்ளன. பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பான், இந்தோனேசியா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, சுமார் 2 ஆயிரம் வீடுகளும் 6 ஆயிரம் பாடசாலைகளும் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது பல மாணவர்கள் திங்கட்கிழமை காலை வழக்கமாக நடைபெறும் பாடசாலை அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக வெளியில் இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக பிலிப்பைன்ஸின் புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜனாதிபதி பெர்டினான் மார்கோஸ் முழு அரச இயந்திரத்தையும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முடுக்கிவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நிலச்சரிவுகளால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் விமானம் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.
பசிபிக் ‘ரிங் ஒவ் பயர்’ எனப்படும் அதிக நில அதிர்வு ஏற்படும் வளையப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படும் நாடாகும்.
