அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழரான நித்யா ராமன் முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
நகர சபை உறுப்பினராகப் பணியாற்றி வரும் நித்யா ராமன், நடைபெற்ற ஆரம்ப தேர்தலில் போதுமான ஆதரவைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் தற்போதைய மேயரான கரன் பாஸுடன் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதித் தேர்தலில் நித்யா ராமன் நேருக்கு நேர் மோதவுள்ளார்.
அமெரிக்கா வாழ் தமிழரான நித்யா ராமன் 2020 ஆம் ஆண்டு முதல் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மலிவு வீட்டு வசதிகளை அதிகரித்தல், வீடற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக முன்வைத்துள்ளார்.
ஆரம்ப வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த தொலைக்காட்சி பிரபலமான ஸ்பென்சர் பிராட் பின்னடைவைச் சந்தித்த நிலையில், நித்யா ராமன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான லொஸ் ஏஞ்சல்ஸின் மேயராக பொறுப்பேற்கும் முதல் பெண் தலைவர்களில் ஒருவராக நித்யா ராமன் வரலாறு படைக்கக்கூடும்.
அமெரிக்க அரசியலில் தமிழர்களின் தடம் மேலும் வலுப்பெற்று வருவதை இந்த முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது.
நித்யா ராமன் இந்தியாவின் கேரளாவில் பிறந்த தமிழராவார். அவர் தனது 6ஆவது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
