வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் சேதம்; வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி

Colombo (News 1st) வவுனியா வடக்கு – ஒலுமடுவில் உள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமானது.

சமயப் பெரியார்கள், ஆலய நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆலய விக்கிரகங்களை சேதப்படுத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்படல் வேண்டும், சிலைகள் மீள நிறுவப்படல் வேண்டும், ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும், ஆலயத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பசார் வீதியூடாக A9 வீதியை சென்றடைந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அங்குள்ள தொல்பொருள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, எதிர்ப்புப் பேரணி வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர, ஜனாதிபதியின் வட மாகாண மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles