பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50  மில்லிமீட்டர் வரையிலான  மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி வட மத்திய அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால், அதனை அண்மித்த கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கலவான, எலபாத்த, எஹெலியகொட, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, பெல்மடுல்ல, அயகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles