கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்கள் அதிகரிப்பு

Colombo (News 1st) நீர் கட்டண திருத்தத்திற்கு இணையாக இன்று(03) முதல் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமானின் கையொப்பத்துடன் ​வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏதேனுமொரு மாதத்தில் பாவனை பூச்சியமாக இருந்தாலும் நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோகத்திற்கு மேலதிகமாக வேறு சில மாற்று நீர் ஆதாரங்களை பயன்படுத்தப்படும் போது அதற்கான பாவனை கட்டணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் அந்த தருணத்தில் தீர்மானிக்கும் மேலதிக கட்டணத்தை பாவனையாளர் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்கு சென்று கட்டணங்களை வசூலிப்பாராயின் அதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தீர்மானிக்கப்படும் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் நீர் கட்டணம் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணப் பட்டியல்கள் கிடைக்கப்பெற்று 30 நாட்களுக்குள் செலுத்த தவறும் வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை என்பன துண்டிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles