வரித்திருத்தங்கள் வரவு செலவுத் திட்ட உரையின் இணைப்பாக வெளியீடு

Colombo (News 1st) அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், அரசாங்கத்தின் செலவின முன்மொழிவுகளை ஜனாதிபதி தௌிவுபடுத்திய போதிலும், அதற்கான வருமானத்தை ஈட்டும் யோசனைகள் தொடர்பில் அவர் விளக்கமளிக்கவில்லை.

வரவு செலவு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரித்திருத்தங்கள் வரவு செலவுத் திட்ட உரையின் இணைப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தமது வருமானத்தின் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள அதிக வரிச்சுமைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே தொழில் வல்லுநர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவிருந்தது.

தற்போது, மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒருவர், பல்வேறு வருமான வகைகளின் கீழ் 6% முதல் 36% வரை வரி செலுத்துகின்றார்.

இவ்வாறு வரி செலுத்துபவர்கள், நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்கள் என ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்ட உரையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள், அதிக வருமானம் ஈட்டுபவர்களில் 20 வீதமானோரின் வரிகளை குறைக்குமாறு நிதியத்திடம் அல்லது கடன் வழங்குனர்களிடம் கோருவதில் இலங்கை அதிகாரிகளுக்கு சிக்கல் இருப்பதாக வரவு செலவு திட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வரவு செலவு திட்டத்தின் இணைப்பில் பல வரித் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, வரி தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்காதவர்கள் மீது வழக்குத் தொடர விசேட தண்டனை ஏற்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, வங்கியொன்றில் நடைமுறை கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டட வரைபடத்திட்டத்தை அங்கீகரித்தல், ​​மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்தல், காணியை அல்லது காணி உறுதிப்பத்திரத்தை பதிவு செய்யும் சந்தர்ப்பங்களிலும் வரி செலுத்துபவரை அடையாளம் காண்பதற்கும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

பெறுமதிசேர் வரி திருத்தங்கள் தொடர்பாக வர்த்தமானியில் வௌயிடுவதற்கும், விலைப்பட்டியல் படிவங்களை ஆ​ணையாளர் நாயகத்தினூடாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலால் வரி தொடர்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என வரவு செலவுத் திட்ட இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், ஒன்லைன் உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துதல், போலி அல்லது மோசடி ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு குழுவை நியமித்தல், புதிய கலால் அனுமதி முறையை அறிமுகப்படுத்துதல், தயாரிப்பு மொத்த, சில்லறை உரிமங்களுக்கு தனியான நிபந்தனைகளை அறிமுகப்படுத்துதல், மதுபான நிலையங்களை திறக்கும் விடயத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல், சுற்றுலா தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்கள் என்பன இதில் அடங்குகின்றன.

இதேவேளை, கலால் வரி திணைக்களம் சில மாற்று யோசனைகளையும் முன்வைக்கவுள்ளது.

இதன் கீழ், உள்ளூர் – வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு, அனைத்து வகையான உள்ளூர் மதுபானங்களுக்கும் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள கேள்விக்கு ஏற்றவாறு கலால் அனுமதி கட்டணத்தை அதிகரித்தல்,வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய மதுபான தயாரிப்புகளில் முதலீட்டை ஊக்குவித்தல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தெரிவு செய்யப்பட்ட  மதுபானங்களை தீர்வை வரியற்ற கடைகளில் விற்பனை செய்ய அனுமதித்தல் என்பன இதன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles