Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய பரீட்சை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 

இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here