Colombo (News 1st) மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று(03) நடைபெற்ற டெங்கு ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள், வழிப்பாட்டுத் தலங்கள், பொது இடங்கள், தனியார் நிறுவனங்களை அண்டிய பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவல் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பிற்காக சுகாதார அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் பிரிவொன்றை நிறுவுவதற்கும் அதற்கு உரிய அதிகாரிகளை நியமிக்கவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் முப்படை பிரதானிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரின் பங்கேற்புடன் இன்று(04) விசேட சந்திப்பொன்றை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here