ட்ரம்ப் மீதான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்..!

2024 இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2023இல் இருந்தே ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் மும்முரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.

டொனால்ட் ட்ரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2021 ஜனவரி 6 அன்று, அப்போதைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்துக்கு முன்பாக வன்முறையில் ஈடுபடும்படி தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக ட்ரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொலராடோ மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், தேர்தல் வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என கொலராடோ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19 அன்று உத்தரவிட்டிருந்தது. இதனால் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருந்ததுடன், அவருக்கு இது பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், கொலராடோ நீதிமன்ற உத்தரவை இரத்து செய்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்த கூடாது என்றும் மத்திய அரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராகவும் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பாராளுமன்றம் மட்டுமே இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், வாக்குச்சீட்டில் டொனால்ட் ட்ரம்ப் பெயர் இடம்பெறுவதில் தடை ஏதுமில்லை எனும் நிலை உருவாகியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள கணக்கில், “அமெரிக்காவுக்கு பெரிய வெற்றி” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles