Tuesday, February 10, 2026
spot_img
Home"இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்" : இம்ரான் கான் அதிரடி..!

“இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்” : இம்ரான் கான் அதிரடி..!

“பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்; இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்” என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றதுக்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான் கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர்.

இதனையடுத்து நவாஸ் ஷெரீப் கட்சியும், பூட்டோவின் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி பொறுப்பேற்றது. அதில் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப், ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ராவல்பிண்டியிலுள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

“என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையென நிரூபிக்கப்பட்டு உள்ளன. 2024 பொது தேர்தலில், பி.டி.ஐ., கட்சியானது திட்டமிட்டே வெளியேற்றப்பட்டது. ஆனால் வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு நாளில் இதற்கு பழி தீர்த்தனர். எனினும், அந்த மாற்றம் ஏற்கப்படவில்லை.

தேர்தல் முடிவை மாற்றி, மோசடியில் ஈடுபட்டு தேசத்தின் நம்பிக்கை உடைத்து நொறுக்கப்பட்ட சூழலில், இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular