தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம் : ஓ.பி.எஸ். திணறல்..!

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக கூறிவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையில் போட்டியிட்டால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை ஆமோதித்துள்ள ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

ஆனால் அவரது இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், “நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். புதிதாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மக்களிடம் அதனை எளிதாக கொண்டு போய் சேர்க்க முடியாது” என்று கூறி வருகிறார்கள்.

இது ஓ.பி.எஸ்.சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதை கேட்பதா? ஆதரவாளர்களின் கருத்துபடி செயல்படுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles