மதுபானம் கொடுத்து மயக்கி பள்ளி மாணவிகள் பலாத்காரம் : இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய வாலிபர்கள் கைது..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். 10 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளான அவர்கள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு கடந்த 16-ஆம் திகதி சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மாணவிகள் இருவரும் திடீரென மாயமாகி விட்டனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகள் இருவரையும் தேடி வந்தனர்.

அவர்களது செல்போன் மூலம் அவர்களது இருப்பிடத்தை போலீசார் கண்காணித்தனர். அப்போது மாணவிகள் இருவரும் பெங்களூருவில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மாணவிகள், 2 வாலிபர்களுடன் பஸ்சில் வந்த போது போலீசாரிடம் சிக்கினர். மாணவிகள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களுடன் இருந்த வாலிபர்கள் குறித்து விசாரித்த போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தவர்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் தங்களை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றதாகவும், மதுபானம் கொடுத்து மயங்க செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளுடன் இருந்த எர்ணாகுளம் அங்கமாலி பகுதியை சேர்ந்த பாசில் பேபி (வயது 23), திருச்சூர் கொடுங்கல்லூர் முகமது ரமீஸ் (22) ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பள்ளி மாணவிகள் இருவருக்கும், அந்த வாலிபர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளனர். அதன் மூலமாக அவர்கள் பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிகள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அதனை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், அங்கு சென்று மாணவிகளை சந்தித்துள்ளனர். பின்பு மோட்டார் சைக்கிளில் மாணவிகள் இருவரையும் எர்ணாகுளத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

பின்பு மாணவிகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து மயங்கச்செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பாசில் பேபி, முகமது ரமீஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது கடத்தல், கற்பழிப்பு, காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிறுமிகளை போதையில் வைத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று மதுபானம் கொடுத்து மயங்க செய்து வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles