சொத்துக்காக தாயின் இறுதி சடங்கை 2 நாட்கள் தாமதமாக்கிய பிள்ளைகள்..!

உயில் எழுதுவது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

79 வயதான வேமு லக்ஷ்மம்மா என்ற மூதாட்டிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைய மகளுடன் வசித்து வந்தார் வேமு லக்ஷ்மம்மா. சில நாட்களுக்கு முன் குளியலறையில் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் வேமு லக்ஷ்மம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

அதுவரை தாயாரை கண்டுகொள்ளாத மகனான சைதி ரெட்டி, சகோதரிகளிடம் சண்டையிட்டு மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து மூதாட்டி வேமு லக்ஷ்மம்மா கடந்த செவ்வாய்கிழமை இரவு காலமானார்.

இதையடுத்து மூதாட்டி மரணத்தை தொடர்ந்து, அவர் விட்டு சென்ற ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களால் ஏற்பட்ட தகராறால் அவரது இறுதிச் சடங்குகளை செய்வதில் இருந்து குடும்பத்தினர் பின்வாங்கினர்.

ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களில் மருத்துவ செலவுக்கு 6 லட்சம் ரூபாயும், மீதமுள்ள 15 லட்ச ரூபாயை, சைதி ரெட்டி எடுத்துக்கொண்டுள்ளார். மூன்று மகள்களும் தங்களுக்குள் 25 சவரன் தங்க நகைகளை சமமாக பகிர்ந்து கொண்டனர்.

இருப்பினும் தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மூதாட்டியின் உடல் ஆம்புலன்சிலும், பின்னர் ஐஸ் பெட்டியிலும் என இரண்டு நாட்களாக வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, இறுதிச் சடங்குச் செலவுகளை ஏற்க சைதி ரெட்டியை வற்புறுத்திய பின்னரே பிரச்சனை தீர்க்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் வாழும் போது தாய், தந்தையரிடம் அன்பு காட்டுவதில்லை. அவர்கள் இருக்கும் போது நாம் சொத்துக்காக சண்டை, பெற்றோரை யார் பார்ப்பது என்பதில் சண்டை என தொடங்கி நம்முடைய பாசத்தை காட்ட தவறுகிறோம். ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் இருக்கும் பாச உணர்வு நம்மில் பல பேருக்கு இருப்பதில்லை. தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத சொத்து தாய், தந்தை பாசம் மட்டுமே என்று உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles