கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் தக்லைப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு மீண்டும் 36 வருடங்கள் கழித்து இக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு ஒரு டீசரின் மூலம் வெளியிடப்பட்டது.
அந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சானது. குறிப்பாக இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தெனாலி படத்திற்கு பிறகு 24 வருடங்கள் கழித்து கமலின் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான். இவ்வாறு பல சிறப்பான விஷயங்கள் தக்லைப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இப்படத்தின் ஸ்டார் காஸ்ட்டும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளனர். அதற்கு பதிலாக இப்படத்தில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் நடிக்க கமிட்டானார்கள்.
சிம்பு கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் துவங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. குறிப்பாக பாண்டிச்சேரியில் இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது இப்படத்தின் 60 % படப்பிடிப்பை முடித்துள்ளார் மணிரத்னம். வெறும் 40 நாட்களில் 60 % படப்பிடிப்பை முடித்துள்ளார் மணிரத்னம். இதைப்போல தான் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பையும் சொன்ன தேதிக்குள் நடத்தி முடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தற்போது தக்லைப் படத்தையும் ஜெட் வேகத்தில் மணிரத்னம் நடத்தி வருகின்றார்.
எனவே கண்டிப்பாக இப்படம் இந்தாண்டு இறுதியிலேயே வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றதாம். இந்நிலையில் தக்லைப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் கேரளா மற்றும் வெளிநாடுகளில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
