கொக்குத்தொடுவாய் அகழ்வு : 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், நேற்று ஏழாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவதலைமையிலான குழுவினர் தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரால் பங்குபற்றுதல்களுடன் நேற்று ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

அதேவேளை மூன்றாவது நாளாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகளும் அகழ்வு பணிகளை கண்காணிப்புச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப்பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின் போது 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 43 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles