கேரளா லாட்டரி பெயரில் போலி லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு அம்மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கேரளா லாட்டரித்துறை அம்மாநில முக்கிய வருவாய்த் துறைகளில் ஒன்றாக உள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கனோர் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கேரளா லாட்டரி பெயரில் போலி லாட்டரி டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஓணம் பம்பர் போலி லாட்டரி டிக்கெட்டுகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கேரளா மெகா மில்லியன் என்ற பெயரில் ஆன்லைன் ஆப்கள் உருவாக்கப்பட்டு ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் என 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் கேரள லாட்டரித்துறையின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போலி லாட்டரி டிக்கெட்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்த லாட்டரித்துறை இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் கேரளா லாட்டரியின் போலியான ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்கும் 60 செயலிகளை நீக்குமாறு கேரள போலீசார் கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அத்தகைய ஆப்களின் விளம்பரங்களை அகற்ற மெட்டாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினரின் சைபர் ரோந்துப் பணியில் 60 போலி ஆன்லைன் லாட்டரி செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் 25 போலி ஃபேஸ்புக் சுயவிவரங்கள் மற்றும் 20 இணையதளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘கேரள மெகா மில்லியன் லாட்டரி’ மற்றும் ‘கேரள சம்மர் சாசன் தமாகா’ போன்ற தலைப்புகளுடன் கேரளா மாநில லாட்டரியை ஆன்லைனில் விற்பனை செய்வதாக உறுதியளித்த விளம்பரங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரப்பப்பட்டன.
இந்நிலையில் எப்படி ஆன்லைன் டிக்கெட் மோசடி நடைபெறுகிறது என்பதை போலீஸார் விளக்கியுள்ளனர். அதாவது கேரள அரசு ஆன்லைன் லாட்டரியை ஆரம்பித்துள்ளதாகவும், 40 ரூபாய் செலவழித்தால் 12 கோடி ரூபாயை வெல்ல முடியும் என்றும் தகவல் அனுப்படும். மேலும் அந்த எண்ணுக்கு 40 ரூபாய் அனுப்பினால், கேரளா லாட்டரியின் டாக்டரேட் செய்யப்பட்ட படம் Whatsapp மூலம் பயனரின் எண்ணுக்கு அனுப்பப்படும்.
டிரா முடிந்ததும், முடிவுகள் பயனரின் எண்ணுக்கு அனுப்பப்படும். அதனை தொடர்ந்து அனுப்பப்பட்ட டிக்கெட்டிற்கு 5 லட்சம் கிடைத்துள்ளதா தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒரு அழைப்பாளர் தன்னை அரசு லாட்டரித்துறையின் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்தி, பரிசுத் தொகை வரவு வைக்கப்பட வேண்டும் என்றால், ஜிஎஸ்டி மற்றும் ஸ்டாம்ப் வரி என கொஞ்சம் பணத்தை மாற்ற வேண்டும் என்று கூறுவார்.
இந்தப் பணத்தை அனுப்பும் போது, அழைப்பாளர் பரிசுத் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிறுத்தி வைத்துள்ளதாகவும், குழப்பத்தைத் சரிசெய்ய மேலும் பணம் கோருவதாகவும் கூறுவார். இதற்கு நம்பகத்தன்மையை வழங்க ஒவ்வொரு கட்டத்திலும் போலி ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிக்கு ஆளானவர்கள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
