பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘தங்கலான்’. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, இப்படம் விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here