பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

10 வயதேயான சிறுமி சாரா மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்ததாகவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இறுதியில் சர்ரே பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து 2023ல் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை 43 வயதான உர்ஃபான் ஷெரீப் என்பவருக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓல்டு பெய்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மட்டுமின்றி, சிறுமியின் வளர்ப்பு தாயார், 30 வயதான பெய்னாஷ் பதூல் என்பவருக்கு 33 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உறவினர் 29 வயது பைசல் மாலிக் என்பவருக்கு 16 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதியரசர் கவானாக் தெரிவிக்கையில், சிறுமி சாராவுக்கு எதிராக இந்த மூவரும் முன்னெடுத்த கொடுமையின் அளவு கிட்டத்தட்ட நினைத்துப் பார்க்க முடியாதது என்றார்.

கொடுமையின் உச்சமாக, சிறுமியை சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பெற்றோர் அனுமதிக்கவில்லை என்பதற்கான மருத்துவ சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உடலில் 25 எலும்பு முறிவுகள், இரும்பு கம்பியால் ஏற்பட்ட தீக்காயம், பற்கள் பதிந்த அடையாளங்கள் என நீதிமன்றத்தையே நடுங்க வைத்துள்ளது இந்த வழக்கு விசாரணை.

பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், இந்த வழக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குழந்தைகள் வீட்டில் கல்வி கற்பதற்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here