எச்.எம்.பி.வி. தொற்று எவ்வாறு பரவுகிறது?

எச்.எம்.பி.வி. தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து மருத்துவத்துறை நிபுணர்கள் கூறியதாவது:-

எச்.எம்.பி.வி. தொற்று எல்லா வயதினருக்கும் சுவாச நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இது புதிய வைரஸ் அல்ல. கடந்த 2001-ம் ஆண்டிலேயே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது ‘பாராமிக்சோவிரிடே’ குடும்பத்தைச் சேர்ந்தது. சுவாச ஒத்திசைவு வைரசுடன் நெருங்கிய தொடர்புடையது.

இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாகவும், அசுத்தமான பரப்புகளைத் தொடுவதாலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் லேசான சுவாசக் கோளாறு முதல் கடுமையான சுவாசப்பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது உலகளவில் பரவலாக உள்ளது மற்றும் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் உச்சமாக இருக்கும், சில பகுதிகளில் இது ஆண்டு முழுவதும் பரவுகிறது.

எச்.எம்.பி.வி. தொற்றின் அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை கூறப்படுகின்றன. இந்த அறிகுறிகள் தனிநபரின் வயது, பொது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். மிதமான அறிகுறிகளில் நிலையான இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும்.

கைக்குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

இன்புளூயன்சா போன்ற பிற சுவாச வைரஸ்களைப் போலவே எச்.எம்.பி.வி.யும் பரவுகிறது. தொற்று பரவலை தடுக்க, சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது. முகக்கவசம் அணிவது போன்றவற்றின் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தலாம். இந்த வைரஸ் தொற்று சாதாரண பாதிப்பு பொதுவாக சில தினங்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும். அதிக பாதிப்பு ஏற்பட்டால், இருமல் போன்ற நீடித்த அறிகுறிகள் நீங்குவதற்கு அதிக நாட்கள் ஆகலாம்.

எவ்வாறு கண்டறியப்படுகிறது?

இது இன்புளூயன்சா போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளைப் பிரதிபலிப்பதால், எச்.எம்.பி.வி. தொற்றை அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறிவது சவாலானது. ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மூலமும், ஆன்டிஜென் கண்டறிதல் மதிப்பீடுகள் மூலமும் தொற்று பாதிப்பை கண்டறிய முடியும்.

தற்போது, இதற்குரிய சிகிச்சையோ, வைரஸ் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. சிகிச்சை என்பது நோய்த்தொற்றின் தீவிரத்தை சார்ந்துள்ளது. லேசான பாதிப்புகளுக்கு ஓய்வு, அதிம் தண்ணீர் குடிப்பது, காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது போதுமானது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனையின்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகம் ஏற்பட்டு நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச பாதிப்பு ஏற்படும்போது ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட வேண்டும். சிலருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படலாம். இப்போதைய சூழ்நிலையில் இதற்குரிய முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles