சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான 6வது லீக் போட்டி பிப்ரவரி 24 ராவல்பிண்டியில் நடைபெற்றது.
நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்திய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் மைக்கேல் பிரேஸ்வெல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
237 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தரும் விதமாக தொடக்க வீரர் வில் யங் துரதிர்ஷ்டவசமாக டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ஓட்டங்களிலும், கான்வே 30 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லாதம் ஜோடி திறமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 105 பந்துகளில் 112 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டாம் லாதம் பொறுப்புடன் விளையாடி 55 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.
அத்துடன் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
https://x.com/ICC/status/1893960135891935241
https://x.com/ICC/status/1893960135891935241/video/1
