உலக நாடுகள் பல இரண்டாம் உலகப்போருக்குப் பின் இராணுவத்துக்காக பெரிய அளவில் செலவு செய்யவில்லை.

ஆனால், அந்த நிலையை புடினும் ட்ரம்பும் மாற்றியுள்ளார்கள்.

ஆக, புடின் உக்ரைனை ஊடுருவியதுபோல எந்த நாட்டை வேண்டுமென்றாலும் ஊடுருவலாம், அமெரிக்கா உதவாமல் போகலாம், எனவே, நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

பல நூறு பில்லியன் செலவிடும் ஜேர்மனி

அவ்வகையில், ஜேர்மனியும் தனது இராணுவத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, அந்நாடும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் தன் இராணுவம் மீது பெரிய அளவில் கவனம் செலுத்தாததால், தற்போது தனது பாதுகாப்புக்காக பல நூறு மில்லியன் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில், இராணுவ கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளன. அவற்றை சரி செய்யவே சுமார் 67 பில்லியன் யூரோக்கள் தேவை.

இராணுவ வீரர்கள் 182,000 பேர்தான் உள்ளனர். ஆகவே, அந்த எண்ணிக்கையை 203,000ஆக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிகள், ட்ரோன்கள், குண்டுகள் என பலவிடயங்கள் தேவைப்படுவதுடன், இராணுவத்தில் பல விடயங்களில் டிஜிட்டல் மயமாக்கல் தேவைப்படுகிறது.

ஆகவே, ஜேர்மன் இராணுவத்தை தயாராக்க, பல நூறு பில்லியன் யூரோக்கள் தேவைப்படுகின்றன. அந்த தொகையை செலவு செய்து இராணுவத்தை மேம்படுத்தும் முயற்சியில் முழுமூச்சாக இறங்க உள்ளது ஜேர்மனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here