மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் போர்னோ மாகாணம் உள்ள நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 29 பேர் பயணித்தனர். ரனா என்ற பகுதியில் சென்றபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பஸ் சிக்கியது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 26 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கமரூன் நாட்டின் எல்லையோர மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலை போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here