பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பயணித்த 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை வெசாக் தினமான நேற்று (12) மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, போலியான எண் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கூடுதல் பாகங்களை பொருத்துதல் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய 36 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாத்தறை தலைமையக பொலிஸாரினால் நேற்று மாத்தறை நகரில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனையின் போது, ​​மேற்படி 36 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு ஒலி வகைகளை கொண்ட சாதனங்களை மோட்டார் சைக்கிள்களில் பொருத்தியுள்ளதோடு, போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறி வீதிகளில் பயணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், காலி, வெலிகம, அக்குரஸ்ஸ மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி சாரதி அனுமதிப்பத்திரங்களை கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here