2025-2029 ஊழல் எதிர்ப்பு தேசிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு உள் விவகாரப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்குள் ஊழலைக் குறைத்து நேர்மையை மேம்படுத்துவதே இத்தகைய பிரிவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் ஊடாக ஊழல் அபாயங்களைக் கண்டறிதல், அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களைக் கண்காணிப்பதுடன், முழு செயல்முறை பற்றிய முழுமையான அறிக்கையும் ஆண்டுதோறும் ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here