ரோஹித், விராட் ஓய்வு குறித்து கௌதம் கம்பீர் என்ன கூறுகிறார் தெரியுமா ?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களின் ஓய்வு இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அல்லது ஷுப்மன் கில் இவர்களில் ஒருவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஓரிரு நாள்களில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

கௌதம் கம்பீர் கூறுவதன்னெ?

இங்கிலாந்துக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருவர் எப்போது கிரிக்கெட் பயணத்தை தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது அந்த நபரின் தனிப்பட்ட முடிவு என நினைக்கிறேன். அதனை முடிவு செய்வதற்கு வேறு யாருக்கும் உரிமையில்லை. பயிற்சியாளர், அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள், இந்திய நாட்டில் யாராக இருந்தாலும் வீரர் ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது எப்போது ஓய்வு பெறக் கூடாது எனக் கூறுவதற்கு உரிமையில்லை. அந்த முடிவை சம்பந்தப்பட்ட வீரர் அவராக எடுக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் இருவர் இல்லாமல் விளையாட உள்ளோம். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் இடத்தையும் நிரப்புவது மிகவும் கடினம். ஆனால், மூத்த வீரர்களின் ஓய்வை மற்ற வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக நினைத்து அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியின்போதும் இதனையே கூறினேன். அப்போது மூத்த வீரரான ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லை. அவர் இல்லாதது மற்ற வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு எனக் கூறினேன்.

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. அதற்கு முன்பாக, டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளோம். அது மிகப்பெரிய தொடராக இருக்கப் போகிறது. அதனால், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கவனம் செலுத்தவுள்ளது. நான் எப்போதும் ஒன்றை கூறுவதுண்டு. வீரர் ஒருவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால், வயது என்பது வெறும் எண் மட்டுமே என்றார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, தொடர்ந்து இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles