லண்டனில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தொன்றில், ஒரு தாயும் மூன்று பிள்ளைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

வடமேற்கு லண்டனிலுள்ள பிரென்ட் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.22 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

70 தீயணைப்பு வீரர்கள் 8 தீயணைப்பு இயந்திரங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கிய நிலையில், அவர்கள் வீட்டிலிருந்த 43 வயது பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளார்கள்.

ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் அவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டார்கள்.

அந்த வீட்டை சோதனையிடும்போது, மேலும் இரண்டு பிள்ளைகள் மற்றொரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் நஸ்ரத் உஸ்மான் (43), அவரது பிள்ளைகளான மர்யம் மிகாயேல் (15), மூஸா உஸ்மான் (8) மற்றும் ரீஸ் உஸ்மான் (4) என தெரியவந்துள்ளது.

சோகம் என்னவென்றால், நஸ்ரத் உயிரிழக்கும்போது அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here