இறால் சாப்பிடுவதனால் கிடைக்கும் பலன்கள்..!

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் நிச்சயம் இறால் முக்கிய இடம்பிடித்துவிடும். இறால் சுவையானது மல்லாது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

இறால் மீன்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.. எலும்பு சிதைவினையும் தடுத்து நிறுத்துகிறது.

வாரம் ஒருமுறை இறாலை உணவில் சேர்த்து வந்தால், எலும்பு கோளாறுகள் அத்தனையும் நீங்கும். அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இறாலை கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ருசியான இறால் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வதக்கி அரைப்பதற்கு தேவையானவை

நெய் – 2 தே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

கிராம்பு – 2

பட்டை – 1 துண்டு

கல்பாசி – சிறிய துண்டு

மிளகு – 1 1/2 தே.கரண்டி

சீரகம் – 1/2 தே.கரண்டி

முந்திரி – 15

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி – சிறிது

பச்சை மிளகாய் – 1

பூண்டு – 7 பல் (தட்டிக் கொள்ளவும்)

இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)

பெரிய வெங்காயம் – 1

கிரேவிக்கு தேவையானவை

நல்லெண்ணெய் – 100 மிலி

கடுகு – 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

உப்பு – சிறிது

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

பூண்டு – 7 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)

பெரிய தக்காளி – 5 (பொடியாக நறுக்கியது)

இறால் – 2 கிலோ

குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி

தண்ணீர் – சிறிது

காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை, கல்பாசி, மிளகு, சீரகம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைம் அதில் சேர்த்து நன்றாக வதங்கவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து வதக்கிய பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து இறாலை சுத்தம் செய்து, தண்ணீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த இறாலுடன் குழம்பு மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால், சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்தது நன்கு 3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அதில் சிறிது நீரை ஊற்றி, காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான இறால் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles