பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, வரி செலுத்தும் அனைவரினதும் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரி இது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு வினைத்திறனான பொது சேவைகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அரச இயந்திரத்திற்குள் காணப்படும் கருப்பு பொறிமுறையை உடைத்து அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வகையில் ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது.

வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 – 2025 நிதியாண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு தொடர்புடைய வரி செலுத்தும் அறிக்கைகளை சமர்ப்பிப்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக பிரத்தியேகமாக செய்யப்படும். மேலும் இந்த இணையத்தளம் இன்று காலை பொதுமக்களுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதன்படி, ஜனாதிபதியன் பங்கேற்புடன் முதலாவது வரி அறிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here